சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புகள்" நாவலில் இருந்து.
நாட்டகம் குன்றுக்குப் போகும் வழியில் ஒரு பொதுக்கிணறு இருக்கிறது. சரித்திரத்தின் பழமையை நினைவூட்டக் கூடிய வைதீகக் கிறிஸ்துவர்களுக்கு வேதாகமத்தின் ஒரு பக்கத்தை நினைவூட்டக்கூடிய கிணறு.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் விடிய மூன்று மணி வரையிலும் அந்தக் கிணறு உறங்கக்கூடும். அந்நேரத்திலும் ஒரு கிழவி வந்தாலும் வருவாள். பெண்கள் குடங்கள் பெண்கள் கிழவிகள் குழந்தைகள் குடங்கள் அம்புரோஸ் ஆசான் இந்தக் கிணற்றுக்குப் பின்னால் குடியிருக்கிறார். 'பாத்திரங்களில் நீர் அமிழும் ஓசையை எழுபது வருடங்களாக இடைவிடாது கேட்டுக்கொண்டு வருகிறேன்' என்றார்.
இன்று ஒரு செய்தி காலையில். அந்தக் கிணற்று நீரில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறதாம். மயக்கம் தலைச்சுற்றல் வாந்தி தொடர்ந்து எண்ணற்ற ஹேஷ்யங்கள். எண்ணற்ற சந்தேகங்கள். வேறுபட்ட உரைகள். முன் விரோதங்கள். மதச்சண்டை. ஜாதிச் சண்டை. என்னென்னவோ.
காலையில் அங்கு போனேன். போலீஸ் வேலி. சோதனையில் நீரில் விஷம் இருப்பது நிரூபணமாகி விட்டதாம். அந்தக் கிணறு அமைதியாகச் செய்து கொண்டிருந்த காரியத்தை தண்ணீர் சப்ளை செய்யப் புறப்பட்ட முனிசிபாலிட்டி அலங்கோலமாகவும் அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் செய்ய முற்பட்டு தத்தளித்து மனித வாய்களில் மிக மோசமான வசைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.
பொதுக் கிணற்றில் விஷம் கலந்த போது ஜனங்கள் பளிச்சென்று தெரிந்து கொண்டு விட்டார்கள். குடல் காட்டிக் கொடுத்து விட்டது. உடல் எதிரியைத் தெரிந்து கொள்வது போல் மன எதிரியை இனங்கானத் தெரிவதில்லை.
No comments:
Post a Comment