3 Feb 2008

மரணம்

நெருநெல் உளனொருவன் இன்றில்லையென்னும்
பெருமை படைத்தது இவ்வுலகு.

நேற்று இருந்தார்கள், ஆனால் இன்றில்லை என்பது தான் இந்த உலகமாம். இதில் பெருமை என்ன வேண்டிக் கிடக்கிறது ?

இன்று காலை தான் எங்களுடன் வேலை பார்த்து வந்த அப்பு என்ற கிட்டத்தட்ட 30 வருடமான ஒருவர் இறந்து விட்டார். நெஞ்சு வலியாம். இத்தனை நாட்கள் கல்லு மாதிரி இல்லையென்றாலும் இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவே முடியாத மாதிரி தான் இருந்தார், இருந்திருந்தார்.

உலகத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டும் விதமாக இன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரும் போதே மரணத்தின் வாசல் வரை போய் விட்டிருந்தார்.

உலகத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டும் விதமாக இன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரும் போதே மரணத்தின் வாசல் வரை போய் விட்டிருந்தார். இப்படி அச்சு அடித்துக் கொண்டிருக்கும் நான் கீழே இருக்கும் Publish பொத்தானை அமுத்தும் வரை இருப்பேனா ?

அப்பு சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டாரா, நான் அவரிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் சொன்னேனா ? கொஞ்சம் கலங்கிப் போனது உண்மையென்றாலும், என்னவோ எப்போதும் இருக்கப் போவது போல் பல்வேறு திட்டங்களும், கனவுகளும், சண்டைகளும், பொறாமையும், இன்னும் மனசெல்லாம் நிறைந்து தான் இருக்கின்றன.

நல்ல விஷயத்தைச் செய்ய நல்ல நேரமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற பழைய தீர்மானம் இன்னும் அழுத்தமாகத் தான் ஆக வேண்டியிருக்கிறது. உடனே செய், இங்கேயே, இப்போதே. என்னுடைய நம்பிக்கைகள், உறுதியான தீர்மானங்கள் மற்றும் விருப்பங்கள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொஞ்சம் செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

இதெல்லாம் ஒரு வேளை இன்று தூங்கி எழுந்திருக்கும் வரை தானோ என்னவோ.

No comments: