29 Mar 2008

கைத்தல நிறைகனி...

- பாலா

காரியம் துவங்கும் முன், கணபதியை வழிபடல் ஒரு மரபு. நீண்ட காலம் கழித்து எழுதத் துவங்கும் எனக்கு, புதுமைப்பித்தனில் இருந்து துவங்க ஆசை. "இங்கே இருந்துதான், புதிய தமிழ் இலக்கியம், வீறுடன் பிறந்த மேனியோடு நாபிக்கொடியை இழுத்துத் தோள் மீது போட்டுக்கொண்டு சமூகத்தின் மீது கசையடி கொடுக்கும் போரினைத் தொடங்குகிறது.

காவியத்துக்கு ஒரு கம்பன். கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன் என்று தமிழ் இலக்கிய சாம்ராஜ்யத்தில் பறை கொட்டிச் சொல்லுகின்ற படைப்புகளின் தொகுதி" இது, ஜெயகாந்தன் புதுமைப்பித்தனைப் பற்றிக் கூறுவது.

புதுமைப்பித்தன் எனக்கு நிலவைப் போல. தொலைவில் இருந்து பார்த்து ரசிக்கும் ஒரு சிறுவனைப் போலவே நான் உணர்கிறேன். அப்படி ஒரு ஆனந்தம் அவர் கதைகளைப் படிக்கும் போது.



கதைகளில் அவர் நடை, ஒரு தேர்ந்த வேட்டை நாயின் பாய்ச்சல் (நன்றி: ஜே ஜே சில குறிப்புகள்) போல தாவித் தாவிச் செல்கிறது. அவற்றில் சில சமயம் தோன்றும் உள்ளொளிள் பரவசமூட்டுபவை.

இன்றைக்கு, "கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும்" பற்றி எழுத ஆசை. கடவுள் ஒரு நாள், கந்தசாமிப்பிள்ளையைக் காண நேரில் வருகிறார். கந்தசாமிப்பிள்ளை எப்படிப் பட்ட ஆள்??

"மேலகரம் இராமசாமிப் பிள்ளைக்கு 45 வயசு. 45 வருடங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக்கட்டு". கடந்த 15 வருடங்களாக இந்த வரிகளை நினைத்துச் சிரித்து கொண்டிருக்கிறேன்.

கந்தசாமிப்பிள்ளை, கடவுளை, காபி சாப்பிட அழைக்கிறார். பில்லை கடவுள் தலையில் கட்டிவிட பிளான். ஹோட்டலில், ஆர்டர் செய்கிறார் பிள்ளை.

"சூடா, ஸ்டிராங்கா, 2 கப் காப்பி" இது பிள்ளை.

"தமிழை மறந்துவிடாதே, 2 கப் காப்பிகள் என்று சொல்" என்கிறார் கடவுள்.

"அப்படி அல்ல, இரண்டு கப்கள் காப்பி" என்று பிள்ளை திருத்த, முறியடிக்கப் பட்ட கடவுள் பரிதாபமாக விழிக்கிறார்.

எனக்கு இது, creative license கொண்டு, பு.பி உருவாக்கிய ஒரு மாபெரும் புனைவாகத் தோன்றுகிறது. படைப்பு விதிகளைத் தாண்டிய கடவுளின் நர்த்தனம் போன்று.

இருவரும் காப்பி பருகி விட்டு, பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறார்கள். கடவுள் கேட்கிறார்,

"நீர் என்ன செய்கிறீர்?" - பிள்ளை, தான் 17 வருடங்களாக ஒரு பத்திரிகை நடத்துவதாகச் சொல்கிறார். கடவுள் நடுநடுங்கிப் போகிறார். பதினேழு பனிரண்டு, 144 இதழ்களா என்று..

ஒரு வேளை காலாண்டுப் பத்திரிகையாக இருக்கலாம் என்ற அற்ப நம்பிக்கை கொண்டு மனதைத் தேற்றிக்கொள்ள முயல்கிறார்.

இது நகைச்சுவையின் உச்ச கட்டம் என்று சொல்லலாம். சித்த வைத்திய தீபிகை என்ற பத்திரிகை நடத்துவதாக் காலட்சேபம் நடத்து பிள்ளையின் வாழ்க்கையில், கடவுள் ஒரு சில நாட்கள் வருகிறார். பிள்ளை அவரிடம் இருந்து கேட்பது அவர் பத்திரிகைக்கு சந்தா.

பிள்ளைக்கு, கடவுளின் தேவை அவ்வளவே. கடவுள் பூமியில் ஏதாவது தொழில் செய்யலாம் என்று பிள்ளையின் உதவியை நாடி, தோல்வியுற்று ஓடி விடுகிறார்.

கதையெங்கும், பிள்ளை, கடவுளை, one-on-one கையாள்வது மிக புதிய யுக்தி. புதுமைப்பித்தனின் வரிகள் வாழ்க்கையின் எல்லா நோக்கங்களையும் எள்ளி நகையாடுகிறது.

நகைச்சுவையால், வறுமையைத் தின்று செரிக்கிறார். வறுமையை எண்ணி ஒரு வருத்தமோ, தாழ்மையுணர்வோ கொஞ்சம் கூட இல்லை. மாறாக, அதையே கவசமாகக் கொண்டு வாழ்க்கையை விளையாடுகிறார் பிள்ளை. எத்தனை முறை படித்தாலும் சலிக்காமல்,

மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கிறேன்.

வாழ்க்கையின் மீது காதல் கொள்ள வைக்கும் கதை.

7 Mar 2008

எழுத்தாளர் சுஜாதா மறைந்தார் ...

என்னுடைய விருப்பமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா போன வாரம் மறைந்தார். வானத்தின் கீழேயுள்ள எல்லா விஷயங்களை மட்டுமல்ல வானத்துக்கு வெளியே உள்ள பலவற்றைப் பற்றியும் எழுதியுள்ளார் சுஜாதா. கடந்த சில வருடங்களாக அவர் ஆனந்த விகடனில் எழுதி வந்த கற்றதும் பெற்றதும் மிகவும் பாராட்டைப் பெற்ற ஒரு தொடர்.



ஆனால் 60 மற்றும் 70களில் வந்த அவரது சிறுகதைகளைத் தான் நான் மிகவும் விரும்புகிறேன். அதிலும் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அவரது அங்கத நடைக்கும் உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் தன்மைக்கும் நல்ல உதாரணம். அவரது கட்டுரைகள் முக்கியமாக சிறீரங்கத்தில் சின்னப் பையனாக இருந்த போது சைக்கிள் கற்றுக் கொண்ட விதமும் முதன் முதலில் விமானம் ஓட்டியதைப் பற்றி எழுதியதும் எழுத்தாளர் சுஜாதாவை விமர்சகர் எஸ்.ஆர்.ராஜன் சந்திப்பது போல் (இரண்டுமே அவர் தான்) எழுதிய கட்டுரை இவையெல்லாம் மிகவும் அருமையானவை.

இன்றைய இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் பொருந்தும் வகையில் எழுத முடிந்தது அவரது முக்கிய சாதனை என்று நினைக்கிறேன். விஞ்ஞானம் மற்றும் கணிப்பொறி பற்றி நம்முடைய வாரந்திர பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் சுஜாதா எனலாம். மின்னணு வாக்கு இயந்திரத்தைத் தயாரித்த விஞ்ஞானிகளின் குழுவில் ஒருவராய் இருந்த சுஜாதா முதலில் ஒரு எழுத்தாளர் அதன் பின் தான் விஞ்ஞானி.



இந்த இயந்திரத்தைப் பல வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக கேரளாவில் சோதனை செய்து பார்த்த போது அது பற்றி எழுதிய கட்டுரை இதற்கு நல்ல ஒரு உதாரணம். வரிசை வரிசையாக மலையாளிகள் இந்த இயந்திரத்தைப் பார்க்க வந்ததும் இந்த இயத்திரத்தை தீவிரமாக எதிர்த்த மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைவரே கடைசியில் தேர்தலில் ஜெயித்த உடன் கண்ணில் நீர் மல்க நன்றி சொன்னதும் இந்த இயந்திரத்தைப் பார்க்க ஒரு கன்னியாஸ்திரீ ஓடி வந்ததையும் மிக அழகாய் பதிவு செய்தவர் சுஜாதா.

திருக்குறளுக்கு அவர் எழுதிய உரை நவீன சுருக்கம். அவர் விட்டுச் சென்ற காலியிடம் நிரப்பப் படுவது கஷ்டம் தான்.