15 Feb 2008

அந்தக இரவில் கந்தக வடை

வைரமுத்துவின் ஆரவார அலங்கார நடை, மிகையான அடைமொழிகள், பொருளற்ற முரண் தொடர்கள், வேண்டாத வடமொழிச் சொற்கள் முதலானவற்றைப் பகடி செய்யும் காக்கை-நரி வடை கதை இதோ :
புழுதி படிந்த ஒரு கிராமத்தில் யெளவனக் கிழவி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். காசு பெற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம்கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம். 'சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால் உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்' எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால் பாட்டி பாராத சமயம் அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போலப் பாய்ந்து அந்த கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.

அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு. பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம் பன்னீர்க் குடங்களின் சாரம் ! ... ஒரு ரோஜாப் பூ ஆளான நேரம் ! அங்கே சென்றது காகம் !

விதைக்குள் இருந்து வந்த விருட்சம் அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம் ! அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்த சொப்பனக் காகம் ! ...

அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து நேரிய நயனத்தால் சுற்றும்முற்றும் பார்த்து ... கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முயன்ற போது ...


பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி ! அந்த நரி நர்த்தக நரி ! ... கார்மேகக் காகத்தைப் பார்த்து ... உடல் வியர்த்தது ! நரியின் மனதில் ஒரு வெறி வேர் விட்டது ! ... அந்த ராஜவடையை அபகரிக்க அதன் நந்தனவனத்து மூளை நாசவேலை செய்தது ! ... நரி அதுவாக காகம் அருகே மெதுவாக ... ஒரு இதுவாகச் சென்றது ! ...


'ஓ உலக அழகியே ! ... உள்ளூர் மோனலிஸாவே ! கறுப்பு முந்திரியே ! கந்தர்வ சுந்தரியே ! நீ பார்க்கவே எவ்வளவு அழகு நீ மட்டும் கானம் இசைத்தால் எருதுக்கும் விருது கிடைக்கும் ! சர்ப்பம் கூட கர்ப்பம் தரிக்குமே !' என்றது. இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது. பூகோளம் புரள்கிறது ! நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது ! ... கார்மேக காகம் நரியை வெறுத்தது. பாட்டை ஒறுத்தது. அது பதிலிறுத்தது ...

'நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் ! மெட்டிருந்தால் தான் பாடுவேன் ... இல்லையேல் இல்லை !' என்று சொல்லிப் பறந்தது ... நரியின் சூது இறந்தது ...!
ஆனந்த விகடன், 3 செப்டம்பர் 1989ல் வந்ததாம்.

3 Feb 2008

மரணம்

நெருநெல் உளனொருவன் இன்றில்லையென்னும்
பெருமை படைத்தது இவ்வுலகு.

நேற்று இருந்தார்கள், ஆனால் இன்றில்லை என்பது தான் இந்த உலகமாம். இதில் பெருமை என்ன வேண்டிக் கிடக்கிறது ?

இன்று காலை தான் எங்களுடன் வேலை பார்த்து வந்த அப்பு என்ற கிட்டத்தட்ட 30 வருடமான ஒருவர் இறந்து விட்டார். நெஞ்சு வலியாம். இத்தனை நாட்கள் கல்லு மாதிரி இல்லையென்றாலும் இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவே முடியாத மாதிரி தான் இருந்தார், இருந்திருந்தார்.

உலகத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டும் விதமாக இன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரும் போதே மரணத்தின் வாசல் வரை போய் விட்டிருந்தார்.

உலகத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டும் விதமாக இன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரும் போதே மரணத்தின் வாசல் வரை போய் விட்டிருந்தார். இப்படி அச்சு அடித்துக் கொண்டிருக்கும் நான் கீழே இருக்கும் Publish பொத்தானை அமுத்தும் வரை இருப்பேனா ?

அப்பு சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டாரா, நான் அவரிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் சொன்னேனா ? கொஞ்சம் கலங்கிப் போனது உண்மையென்றாலும், என்னவோ எப்போதும் இருக்கப் போவது போல் பல்வேறு திட்டங்களும், கனவுகளும், சண்டைகளும், பொறாமையும், இன்னும் மனசெல்லாம் நிறைந்து தான் இருக்கின்றன.

நல்ல விஷயத்தைச் செய்ய நல்ல நேரமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற பழைய தீர்மானம் இன்னும் அழுத்தமாகத் தான் ஆக வேண்டியிருக்கிறது. உடனே செய், இங்கேயே, இப்போதே. என்னுடைய நம்பிக்கைகள், உறுதியான தீர்மானங்கள் மற்றும் விருப்பங்கள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொஞ்சம் செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

இதெல்லாம் ஒரு வேளை இன்று தூங்கி எழுந்திருக்கும் வரை தானோ என்னவோ.