12 Aug 2008

சுதந்திர தினம்

இன்னும் சில நாட்களில் வருகிறது இன்னொரு சுதந்திர தினம். அதை முன்னிட்டு இதோ என்னுடைய கவிதை ஒன்று.

ஆகஸ்டு பதினைந்தும் சுதந்திரமும்

காற்றில் ஆடும் தேசியகொடிகள்
காதைக் கிழிக்கும் மேடைப் பேச்சுகள்
அரசியல் சுதந்திரத்தின் ஆரவாரங்கள்
ஆகஸ்டு 15ன் மாயத் தோற்றங்கள்

வருடந்தோறும் விடாமல் நடக்கும்
பக்தி சடங்குகள் தேச சம்பிரதாயங்கள்
தேவை இல்லை இந்த சுதந்திரம்
எனக்கு வேண்டும் உண்மை சுதந்திரம்


வெயில் அடிக்கும் பகல் நேரத்தில் - என்
வீட்டு வாசல் வேப்ப நிழலில்
காலை நீட்டி தூங்க முடிந்தால் - ஆஹா
கிடைத்தது சுதந்திரம் !
கிடைத்தது சுதந்திரம் !

நெருஞ்சி முட்களை ஒதுக்கி விட்டு - என்
குருஞ்சிப் பூக்களை விருந்துக்கு அழைத்து
மலர்களுடன் மயங்கியே கிடந்தால் - அன்று
மனதுக்கு கிடைத்தது மகிழ்ச்சி சுதந்திரம்

கொட்டும் மழையில் சிரிக்கும் நதியில்
பொட்டல் காட்டில் எரிக்கும் வெயிலில்
ஆயிரக்கணக்கில் ஆட்கள் நெரிக்கும்
அரசியல் கூட்டம் சந்தை திருவிழாவில்

முகமும், முகவரியும் இல்லாத உருவமாய்
தனியாய், காற்றாய், நிழலாய், அருவமாய்
இருந்தும் இல்லாமல் இருக்க முடிந்தால்
இனிப்பாய் இனிக்கும் இன்பச் சுதந்திரம்

ரகசிய சந்தோஷங்களை
ரணங்களை, ஆசைகளை
பயத்தையும், கூடவே என்
பொறாமையையும் சொல்ல ஒரு
தோழி - குறைந்த பட்சம் ஒரு தோழனாவது -
கூட இருந்தால் பாக்கியம். அது சுதந்திரம்.

என்ன தான் இருந்தாலும்
பிடித்தவளிடம் பல் இளிக்கவும்
பிடிக்காதவனிடம் முகஞ்சுளிக்கவும்
முடிந்தால் போதும்
அதுவே சுதந்திரம் !

---
பின்குறிப்பு

கொடிக்கு அல்ல, ஆசிரியர்களுக்கு மட்டும் மரியாதை கொடுத்து வெயிலில் நின்று, பின் கொடுத்த மிட்டாயை வாங்கி சாப்பிட்டு விட்டாலும், எல்லோரும் போன பின்பு இப்படி விளையாட முடிந்தால் அது தான் உண்மையில் சுதந்திரம்.

கொடிக்கு அவ மரியாதை என்று யாராவது இந்த குழந்தைகளின் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ ?

6 Apr 2008

வியத்தலும் இலமே ...

மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுப்பைப் படித்ததிலிருந்தே அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகளைப் படிக்க வேண்டும் என்றொரு ஆவல் தொடர்ந்து இருந்து வந்தது. அப்போது தான் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து இந்த "வியத்தலும் இலமே" என்ற புத்தகம் வந்திருப்பதை அறிந்து வாங்கினோம்.இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பல நாடுகளில் பணிபுரிந்து விட்டு இப்போது கனடாவில் ஓய்விலிருக்கிறார்.

“உங்களுக்கு ஆங்கில எழுத்தாளர்களைச் சந்திப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. நீங்கள் அவர்களைப் பற்றி எழுதலாமே.” என்று சுந்தர ராமசாமி சொன்னதை அடுத்து இப்படி பல ஆங்கில எழுத்தாளர்களைச் சந்தித்து எழுதிய நேர்காணல்கள் தான் இப்புத்தகத்தில். வித்தியாசப்பட்ட பல எழுத்தாளர்களைச் சந்தித்து (“எழுத்தாளர்கள் என்றாலே வித்தியாசப்பட்டவர்கள் தானே !”) அவர்களைப் பற்றி வியந்து வியந்து இவற்றை எழுதியுள்ளார்.

முன்னுரையில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியது போல,

“இவர் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப்பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கண்ணாடியால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள். கவனம் சற்றுக் குறைந்தால் அவர்களும் உடைந்து அவர்களைக் கையாள்பவர்கள் கைகளிலும் இரத்தம் வரவழைத்துவிடுவார்கள். அவர்களிடம் குத்துச் சண்டை நடத்து முடியாது. மிகக் கவனமாக அவர்களைக் கையாண்டிருப்பது ஒரு சாதனை தான். எளிதில் அகப்படாதவர்களை புகழ்பெற்றவர்களை ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்.”
பலதரப்பட்டவர்கள். இவர் செவ்வி கண்டவர்களில் அதிகம் ஆச்சரியப்பட வைத்தவர் அகில் சர்மா தானாம். மில்லியன் டொலர் சம்பளம் கிடைக்கும் நிரந்தரமான வேலையைத் துறந்துவிட்டு முழுநேர எழுத்து வேலைக்கு வந்தவர்.
“ 'வேலையிலிருந்து விலகிவிட்டீர்களா ?' என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். அவர் 'ஆம், ஆம்' என்று பதிலளித்தார். ஓர் எழுத்தாளர் அப்படி முடிவெடுப்பதற்கு அவருக்கு எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும் !”
டேவிட் ஓவன் என்பவரிடம் இருந்து தான் நியூ யோர்க்கர் போன்று பெரும் பத்திரிக்கைகளில் இலக்கணத்துக்கு என்று தனியாக ஓர் எடிட்டர் இருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டாராம்.
“ஓர் இலக்கண எடிட்டர் மூன்று சொல் வாக்கியத்தில் நாலு பிழை கண்டு பிடிப்பார் என்று சொல்லி டேவிட் ஓவன் என்னை அதிசயிக்க வைத்தார் !”
இந்த மிகப் புகழ்பெற்றவர்களின் எளிமை தன்னை மிகவும் வியக்க வைத்ததாக பல இடங்களில் எழுதியுள்ளார். உதாரணமாக,
“டேவிட் செடாரிஸ் மேடையில் தோன்ற 25000 டொலர் சன்மானம் வழங்குவார்கள். செவ்வி முடிந்து நான் புறப்பட்ட போது அவரே வாசல் வரை வந்து வழியனுப்பியவர், என் பையை அவரே தூக்கிவிட்டார். அதை நான் பறிக்க வேண்டி வந்தது.

மொகமட் நஸீகு அலி என்பவர் இளைஞர். அவருடைய முதல் கதை நியூ யோர்க்கரில் பிரசுரமாகியிருந்தது. எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று கேட்டேன். '5200 டொலர். என்னால் நம்பவே முடியவில்லை' என்று சொல்லிவிட்டு வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு சிரித்தார். அவருக்கு வெட்கம் வந்துவிட்டது.”
இன்னேர் அதிசயம் இந்தப் பிரபலர்கள் அனுபவித்த வறுமை. ஓஸ்கார் பரிசு பெற்ற இயக்குநர் பிரிஸ்கி அகெடமி விழாவுக்கு ஒரு ஆடம்பரமான ஆடையை வாடகைக்கு எடுத்து உடுத்தி வந்திருந்தாராம். “நான் ஒரு நாள் சிண்ட்ரல்லா" என்று சொன்னாராம். புலிட்சர் பரிசு பெற்ற ஃபிராங்க் மக்கோர்ட் சிறிய வயதில் கீழ்வீட்டிலிருந்து திருடிய மின்சாரத்தில் கம்பளியைச் சூடாக்கி அதற்குள் சுருண்டு படுத்துக் கொள்வாராம்.

சில அருமையான விஷயங்கள் இங்குமங்கும் சிதறிக் கிடக்கின்றன இந்தச் செவ்விகளில். வார்ரென் கரியோ என்பவர் கனடாவில் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் கில்லெர் பரிசுத் தெரிவுக் குழுவில் நடுவராக பணியாற்றியவர்.
“அவரிடம் இரண்டு நல்ல புத்தகங்களில் ஒன்றை மட்டும் எப்படித் தெரிவு செய்வார் என்று கேட்டபோது நுட்பமான ஒரு விசயத்தைச் சொன்னார். 'திரும்பத் திரும்பப் படிக்கும் போது ஒன்றிலே ஒளி கூடும். இன்னொன்றிலோ குறையும். ஒளி கூடியதையே நான் தெரிவு செய்கிறேன்' என்றார்.”
மிக நல்ல இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். பரிந்துரைக்கிறேன்.

29 Mar 2008

கைத்தல நிறைகனி...

- பாலா

காரியம் துவங்கும் முன், கணபதியை வழிபடல் ஒரு மரபு. நீண்ட காலம் கழித்து எழுதத் துவங்கும் எனக்கு, புதுமைப்பித்தனில் இருந்து துவங்க ஆசை. "இங்கே இருந்துதான், புதிய தமிழ் இலக்கியம், வீறுடன் பிறந்த மேனியோடு நாபிக்கொடியை இழுத்துத் தோள் மீது போட்டுக்கொண்டு சமூகத்தின் மீது கசையடி கொடுக்கும் போரினைத் தொடங்குகிறது.

காவியத்துக்கு ஒரு கம்பன். கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன் என்று தமிழ் இலக்கிய சாம்ராஜ்யத்தில் பறை கொட்டிச் சொல்லுகின்ற படைப்புகளின் தொகுதி" இது, ஜெயகாந்தன் புதுமைப்பித்தனைப் பற்றிக் கூறுவது.

புதுமைப்பித்தன் எனக்கு நிலவைப் போல. தொலைவில் இருந்து பார்த்து ரசிக்கும் ஒரு சிறுவனைப் போலவே நான் உணர்கிறேன். அப்படி ஒரு ஆனந்தம் அவர் கதைகளைப் படிக்கும் போது.



கதைகளில் அவர் நடை, ஒரு தேர்ந்த வேட்டை நாயின் பாய்ச்சல் (நன்றி: ஜே ஜே சில குறிப்புகள்) போல தாவித் தாவிச் செல்கிறது. அவற்றில் சில சமயம் தோன்றும் உள்ளொளிள் பரவசமூட்டுபவை.

இன்றைக்கு, "கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும்" பற்றி எழுத ஆசை. கடவுள் ஒரு நாள், கந்தசாமிப்பிள்ளையைக் காண நேரில் வருகிறார். கந்தசாமிப்பிள்ளை எப்படிப் பட்ட ஆள்??

"மேலகரம் இராமசாமிப் பிள்ளைக்கு 45 வயசு. 45 வருடங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக்கட்டு". கடந்த 15 வருடங்களாக இந்த வரிகளை நினைத்துச் சிரித்து கொண்டிருக்கிறேன்.

கந்தசாமிப்பிள்ளை, கடவுளை, காபி சாப்பிட அழைக்கிறார். பில்லை கடவுள் தலையில் கட்டிவிட பிளான். ஹோட்டலில், ஆர்டர் செய்கிறார் பிள்ளை.

"சூடா, ஸ்டிராங்கா, 2 கப் காப்பி" இது பிள்ளை.

"தமிழை மறந்துவிடாதே, 2 கப் காப்பிகள் என்று சொல்" என்கிறார் கடவுள்.

"அப்படி அல்ல, இரண்டு கப்கள் காப்பி" என்று பிள்ளை திருத்த, முறியடிக்கப் பட்ட கடவுள் பரிதாபமாக விழிக்கிறார்.

எனக்கு இது, creative license கொண்டு, பு.பி உருவாக்கிய ஒரு மாபெரும் புனைவாகத் தோன்றுகிறது. படைப்பு விதிகளைத் தாண்டிய கடவுளின் நர்த்தனம் போன்று.

இருவரும் காப்பி பருகி விட்டு, பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறார்கள். கடவுள் கேட்கிறார்,

"நீர் என்ன செய்கிறீர்?" - பிள்ளை, தான் 17 வருடங்களாக ஒரு பத்திரிகை நடத்துவதாகச் சொல்கிறார். கடவுள் நடுநடுங்கிப் போகிறார். பதினேழு பனிரண்டு, 144 இதழ்களா என்று..

ஒரு வேளை காலாண்டுப் பத்திரிகையாக இருக்கலாம் என்ற அற்ப நம்பிக்கை கொண்டு மனதைத் தேற்றிக்கொள்ள முயல்கிறார்.

இது நகைச்சுவையின் உச்ச கட்டம் என்று சொல்லலாம். சித்த வைத்திய தீபிகை என்ற பத்திரிகை நடத்துவதாக் காலட்சேபம் நடத்து பிள்ளையின் வாழ்க்கையில், கடவுள் ஒரு சில நாட்கள் வருகிறார். பிள்ளை அவரிடம் இருந்து கேட்பது அவர் பத்திரிகைக்கு சந்தா.

பிள்ளைக்கு, கடவுளின் தேவை அவ்வளவே. கடவுள் பூமியில் ஏதாவது தொழில் செய்யலாம் என்று பிள்ளையின் உதவியை நாடி, தோல்வியுற்று ஓடி விடுகிறார்.

கதையெங்கும், பிள்ளை, கடவுளை, one-on-one கையாள்வது மிக புதிய யுக்தி. புதுமைப்பித்தனின் வரிகள் வாழ்க்கையின் எல்லா நோக்கங்களையும் எள்ளி நகையாடுகிறது.

நகைச்சுவையால், வறுமையைத் தின்று செரிக்கிறார். வறுமையை எண்ணி ஒரு வருத்தமோ, தாழ்மையுணர்வோ கொஞ்சம் கூட இல்லை. மாறாக, அதையே கவசமாகக் கொண்டு வாழ்க்கையை விளையாடுகிறார் பிள்ளை. எத்தனை முறை படித்தாலும் சலிக்காமல்,

மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கிறேன்.

வாழ்க்கையின் மீது காதல் கொள்ள வைக்கும் கதை.