12 Aug 2008

சுதந்திர தினம்

இன்னும் சில நாட்களில் வருகிறது இன்னொரு சுதந்திர தினம். அதை முன்னிட்டு இதோ என்னுடைய கவிதை ஒன்று.

ஆகஸ்டு பதினைந்தும் சுதந்திரமும்

காற்றில் ஆடும் தேசியகொடிகள்
காதைக் கிழிக்கும் மேடைப் பேச்சுகள்
அரசியல் சுதந்திரத்தின் ஆரவாரங்கள்
ஆகஸ்டு 15ன் மாயத் தோற்றங்கள்

வருடந்தோறும் விடாமல் நடக்கும்
பக்தி சடங்குகள் தேச சம்பிரதாயங்கள்
தேவை இல்லை இந்த சுதந்திரம்
எனக்கு வேண்டும் உண்மை சுதந்திரம்


வெயில் அடிக்கும் பகல் நேரத்தில் - என்
வீட்டு வாசல் வேப்ப நிழலில்
காலை நீட்டி தூங்க முடிந்தால் - ஆஹா
கிடைத்தது சுதந்திரம் !
கிடைத்தது சுதந்திரம் !

நெருஞ்சி முட்களை ஒதுக்கி விட்டு - என்
குருஞ்சிப் பூக்களை விருந்துக்கு அழைத்து
மலர்களுடன் மயங்கியே கிடந்தால் - அன்று
மனதுக்கு கிடைத்தது மகிழ்ச்சி சுதந்திரம்

கொட்டும் மழையில் சிரிக்கும் நதியில்
பொட்டல் காட்டில் எரிக்கும் வெயிலில்
ஆயிரக்கணக்கில் ஆட்கள் நெரிக்கும்
அரசியல் கூட்டம் சந்தை திருவிழாவில்

முகமும், முகவரியும் இல்லாத உருவமாய்
தனியாய், காற்றாய், நிழலாய், அருவமாய்
இருந்தும் இல்லாமல் இருக்க முடிந்தால்
இனிப்பாய் இனிக்கும் இன்பச் சுதந்திரம்

ரகசிய சந்தோஷங்களை
ரணங்களை, ஆசைகளை
பயத்தையும், கூடவே என்
பொறாமையையும் சொல்ல ஒரு
தோழி - குறைந்த பட்சம் ஒரு தோழனாவது -
கூட இருந்தால் பாக்கியம். அது சுதந்திரம்.

என்ன தான் இருந்தாலும்
பிடித்தவளிடம் பல் இளிக்கவும்
பிடிக்காதவனிடம் முகஞ்சுளிக்கவும்
முடிந்தால் போதும்
அதுவே சுதந்திரம் !

---
பின்குறிப்பு

கொடிக்கு அல்ல, ஆசிரியர்களுக்கு மட்டும் மரியாதை கொடுத்து வெயிலில் நின்று, பின் கொடுத்த மிட்டாயை வாங்கி சாப்பிட்டு விட்டாலும், எல்லோரும் போன பின்பு இப்படி விளையாட முடிந்தால் அது தான் உண்மையில் சுதந்திரம்.

கொடிக்கு அவ மரியாதை என்று யாராவது இந்த குழந்தைகளின் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ ?

No comments: