7 Mar 2008

எழுத்தாளர் சுஜாதா மறைந்தார் ...

என்னுடைய விருப்பமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா போன வாரம் மறைந்தார். வானத்தின் கீழேயுள்ள எல்லா விஷயங்களை மட்டுமல்ல வானத்துக்கு வெளியே உள்ள பலவற்றைப் பற்றியும் எழுதியுள்ளார் சுஜாதா. கடந்த சில வருடங்களாக அவர் ஆனந்த விகடனில் எழுதி வந்த கற்றதும் பெற்றதும் மிகவும் பாராட்டைப் பெற்ற ஒரு தொடர்.



ஆனால் 60 மற்றும் 70களில் வந்த அவரது சிறுகதைகளைத் தான் நான் மிகவும் விரும்புகிறேன். அதிலும் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அவரது அங்கத நடைக்கும் உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் தன்மைக்கும் நல்ல உதாரணம். அவரது கட்டுரைகள் முக்கியமாக சிறீரங்கத்தில் சின்னப் பையனாக இருந்த போது சைக்கிள் கற்றுக் கொண்ட விதமும் முதன் முதலில் விமானம் ஓட்டியதைப் பற்றி எழுதியதும் எழுத்தாளர் சுஜாதாவை விமர்சகர் எஸ்.ஆர்.ராஜன் சந்திப்பது போல் (இரண்டுமே அவர் தான்) எழுதிய கட்டுரை இவையெல்லாம் மிகவும் அருமையானவை.

இன்றைய இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் பொருந்தும் வகையில் எழுத முடிந்தது அவரது முக்கிய சாதனை என்று நினைக்கிறேன். விஞ்ஞானம் மற்றும் கணிப்பொறி பற்றி நம்முடைய வாரந்திர பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் சுஜாதா எனலாம். மின்னணு வாக்கு இயந்திரத்தைத் தயாரித்த விஞ்ஞானிகளின் குழுவில் ஒருவராய் இருந்த சுஜாதா முதலில் ஒரு எழுத்தாளர் அதன் பின் தான் விஞ்ஞானி.



இந்த இயந்திரத்தைப் பல வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக கேரளாவில் சோதனை செய்து பார்த்த போது அது பற்றி எழுதிய கட்டுரை இதற்கு நல்ல ஒரு உதாரணம். வரிசை வரிசையாக மலையாளிகள் இந்த இயந்திரத்தைப் பார்க்க வந்ததும் இந்த இயத்திரத்தை தீவிரமாக எதிர்த்த மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைவரே கடைசியில் தேர்தலில் ஜெயித்த உடன் கண்ணில் நீர் மல்க நன்றி சொன்னதும் இந்த இயந்திரத்தைப் பார்க்க ஒரு கன்னியாஸ்திரீ ஓடி வந்ததையும் மிக அழகாய் பதிவு செய்தவர் சுஜாதா.

திருக்குறளுக்கு அவர் எழுதிய உரை நவீன சுருக்கம். அவர் விட்டுச் சென்ற காலியிடம் நிரப்பப் படுவது கஷ்டம் தான்.

No comments: